full screen background image

“கார்த்தி-ரகுல் ப்ரீத் சிங் ஜோடியின் நடிப்பில் வெற்றிப் படமாகும்” – தேவ் படக் குழுவினரின் நம்பிக்கை.

“கார்த்தி-ரகுல் ப்ரீத் சிங் ஜோடியின் நடிப்பில் வெற்றிப் படமாகும்” – தேவ் படக் குழுவினரின் நம்பிக்கை.

‘சிங்கம்-2’, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது படைப்பாகத் தயாரித்து வரும் திரைப்படம் தேவ்.

படத்தில் கார்த்தி நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்ராஜ், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – தாமரை, கபிலன், விவேக், ரஜத் ரவிஷங்கர், சண்டை இயக்கம் – அன்பறிவு, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், நடன இயக்கம் – தினேஷ், ஷோபி, உடைகள் வடிவமைப்பு – நீரா கோனா, டிசைன்ஸ் – டுனீ ஜான், புகைப்படங்கள் – ஆனந்த்குமார், ஒப்பனை – வி.முருகன், தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.கணேஷ், பி.எஸ்.ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பாளர் – கே.வி.துரை, முதன்மை தயாரிப்பு – ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விநியோகம் – முரளி சினி ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.லஷ்மண்குமார், அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது. முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளரான ஹெச்.முரளி இந்தப் படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்கிறார்.

இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் கார்த்தி, நாயகி ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குநர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ், கலை இயக்குநர் ராஜீவன், விநியோஸ்தகரும், தயாரிப்பாளருமான ஹெச்.முரளி, நடிகர் ஆர்.ஜே.விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவத்திலிருந்தே நண்பர்கள். எல்.கே.ஜி.யில் இருந்தே ஒன்றாகப் படித்தோம். சிறு வயதில் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன்.

அவரின் தாத்தா வெற்றிப் படமான ‘மதுர வீரனை’ தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த ‘தேவ்’ திரைப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். ‘இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்’ என்ற கருத்தை தாங்கி வரும்.

ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.

ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்..” என்றார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் பேசுகையில், “குழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜத் கதை சொல்லும்போது என்ன  கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். உலகத்தின் பல இடங்களில் படப்பிடிப்பினை நடத்தியுள்ளோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன்..” என்றார்.

நாயகி ரகுல் ப்ரீத் சிங் பேசும்போது, “இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்தக்  கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

கார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் பேசும்போது, “இந்தக் கதைதான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கதை உருவானது.

இப்படத்தை எடுத்து முடிக்க குறைவான நேரம்தான் ஒதுக்கினோம். அந்த நாட்களுக்குள்ளாக படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

கார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல்தான் இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி…” என்றார்.

Our Score