அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’.
இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம் படத் தொகுப்பை கவனித்துள்ளார். ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.கே.கண்டி இயக்கியுள்ளார். இயக்குநர் என்.கே.கண்டி சிம்பு நடித்த ‘கெட்டவன்’ படத்தை இயக்கியவர்.
‘டே நைட்’ படம் குறித்து இயக்குநர் என்.கே.கண்டி கூறும்போது, “நான் சினிமாவை மட்டும்தான் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது. அந்தக் கொடூரமான காதலின் பின் விளைவுகள் என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தின் இடைவேளைக்கு பின்பு வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 2018-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019-ம் ஆண்டில் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதுதான் இக்கதையின் சிறப்பம்சம்.
படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். அவர்கள் எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்.
இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதைவிட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும், திருப்பங்களும், திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிராமப் புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கிறோம். மிகக் குறைந்த முதலீட்டில் மிகக் குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில் நுட்பக் கலைஞர்கள்தான்…” என்றார்.
நடிகரும், தயாரிப்பாளருமான ஆதர்ஷ் இப்படம் குறித்து கூறும்போது, “எங்களுக்கு சினிமா பின்புலம் எதுவும் கிடையாது. அரசியல் பவரும் கிடையாது. முழுக்க, முழுக்க சினிமா மேல் இருக்கிற காதல் காரணமாகத்தான் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து தயாரித்து இதில் நானே நடித்துள்ளேன்.
7 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் 10 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இயக்குநர் என்.கே.கண்டிக்கு மிகப் பெரிய திறமை உண்டு. சரியான ஹீரோ, தகுதியான பட்ஜெட் கிடைத்தால் இவர் மிகப் பெரிய இயக்குநர் வரிசையில் இருப்பார்.
வெறும் பத்து லட்சம் ரூபாயில் இவ்வளவு குவாலிட்டியாக படம் எடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் கண்டிக்கு எனது நன்றி. இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் எங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறோம்..” என்றார்.