சென்னையில் இன்று நடைபெற்ற சினிமா டிவி நடன கலைஞர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் புதிய தலைவராக நடன இயக்குநர் ஷோபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் சினிமாவில் நடனமாடும் கலைஞர்களுக்கு தனியாக சங்கம் உண்டு. சமீபத்திய வரவான தொலைக்காட்சியையும் சேர்த்துக் கொண்டு அந்தச் சங்கம் இப்போது ‘தென்னிந்திய திரைப்படம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.
சினிமாவில் இருக்கும் அனைத்து நடனக் கலைஞர்களும், இயக்குநர்களும் இதில் உறுப்பினராகியிருக்கிறார்கள். இங்கே உறுப்பினராக இல்லாதவர்கள் எந்தத் திரைப்படத்திலும், தொலைக்காட்சிகளிலும் நடனமாடவே முடியாது என்கிற கட்டுப்பாடு உண்டு. இதனாலேயே தென்னிந்திய மொழிகளில் நடனமாடும் கலைஞர்கள் அதிகம் பேர் இங்கே உறுப்பினராகியிருக்கிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படுவதுண்டு. அந்த வகையில் 2015-2017-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலையில் இருந்து அந்தச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
காலையில் நடந்த வாக்குப்பதிவின்போது நடிகர் கமல்ஹாசன், நடிகை சீமா, ராஜூ சுந்தரம் உள்ளிட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். மற்றும் பல நடனக் கலைஞர்களும், நடன இயக்குநர்களும் வரிசையில் இன்று வாக்களித்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பின்பு வாக்குகளின் எண்ணும் பணி உடனேயே தொடங்கியது. இரவு 10 மணிக்கு முடிவுகள் வெளியாகின.
இதன்படி நடன இயக்குநர் ஷோபி பால்ராஜ் சங்கத்திற்கு புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒய்.சிவா செயலாளராகவும், புவனசங்கர் பொருளாளராகவும் தேர்வாகியுள்ளனர். மேலும் ஆர்.சுரேஷ் மற்றும் பி.வி.நோபல் ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இணைச் செயலாளர்களாக நடன இயக்குநர் தினேஷும், பி.ரகுராமும் தேர்வாகியுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் நாளை பதவியேற்கவுள்ளனர்.