மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பூமராங்’.
இந்தப் படத்தில் அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை மேகா ஆகாஷ், படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா, எம்.கே.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் எம்.கே.ராம்பிரசாத், நாயகன் அதர்வா, நாயகி இந்துஜா, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர், இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “எல்லாமே கிடைத்தால்தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச் சிறப்பாக எடுப்பவர் இயக்குநர் கண்ணன். மோதலில்தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில்தான் நட்பு ஆரம்பித்தது.
எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம்தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதி நீர் பிரச்சினையை, நதி நீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம்…” என்றார்.
இசையமைப்பாளர் ரதன் பேசும்போது, “நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மாதான். அவர் என் மீது வைத்த நம்பிக்கையினால்தான் நான் இங்கு இருக்கிறேன். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்திருந்த என்னைப் பாராட்டுவதற்காகத்தான் என்னை அழைத்தார் கண்ணன் சார். நான் அவரைச் சந்தித்த பிறகு ‘நாம சேர்ந்து படம் பண்ணலாமா?’ என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை இந்தப் படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார்.
தமிழில் ஒரு நல்ல படத்தில் பணியாற்றுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன். இன்றைய சமூகத்துக்குத் தேவையான கருத்தை சொல்லியிருக்கும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது…” என்றார்.
நடிகை இந்துஜா பேசும்போது, “அதர்வா, ஆர்.ஜே.பாலாஜியுடன்தான் அதிகம் எனக்கு காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்குமாறு முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்.ஜே.பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தை பார்ப்பீங்க என நம்புகிறேன்…” என்றார்.
இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், “ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப் பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம்.
இந்தப் படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி.
‘இவன் தந்திரன்’ படத்துக்கு பிறகு இது எனக்கு முக்கியமான படம். அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப் படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்…” என்றார் நம்பிக்கையுடன்..!
நடிகர் அதர்வா பேசும்போது, “படம் எப்போது ஆரம்பித்து, எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். ‘பூமராங்’ என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்.
ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த ‘பூமராங்’ வந்திருக்கிறது, நிச்சயமாக அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன்…” என்றார்.