full screen background image

செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிக்கும் ‘பேட்டரி’

செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிக்கும் ‘பேட்டரி’

ஶ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மாதையன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பேட்டரி’. 

இயக்குநர் மணிபாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்கிறார். தனுஷின் ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ‘கைதி’ படத்தில் மக்களிடம் கை தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

battery-poojai-stills-2

இப்படத்தில் நாயகன் செங்குட்டுவன்  சப்-இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். நாயகனுக்கு இணையானதாக நாயகி பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.  

இயக்குநர் மணி பாரதி பிரபல இயக்குநர்களான வஸந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரின்  கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் மணி பாரதி பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்தில் பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது.

சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம்.

battery-poojai-stills-4

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட்ட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்..?

மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்…” என்றார். 

இந்தப் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இந்த பூஜை நிகழ்வில் இயக்குநர் லிங்குசாமி கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

Our Score