பி – மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அதிரன்’.
இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்களான சுரேஷ்குமார், சஞ்சனா இருவரும் அறிமுகமாகியுள்ளனர். இவர்களோடு புதுமுகங்கள் அப்துல் ரஹ்மான்கான், தங்கமுத்து, ஸ்ரீராம், அச்சு, பாத்திமா, நாகராஜ், சானு ஆன்டனி, பர்தீஷ், கார்த்திக், இளசு, ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மகேஷ், இசை – ரகு, ஜெய், படத் தொகுப்பு – இத்ரீஸ், கலை இயக்கம் – கென்னடி, எழுத்து, இயக்கம் – ஜே.வி.மோகன்.
‘அதிரன்’ படம் பற்றி இயக்குநர் மோகன் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும் நாயகன் சூர்யாவின் உயிருக்கு உயிரான நண்பன் ஸ்ரீ. ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீயின் குடும்பம் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அந்த கடனை தானே தருவதாக பொறுப்பேற்கிறான் சூர்யா.
ஆனால் சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பித் தர முடியாததால் சூர்யாவின் நண்பன் ஸ்ரீ கடத்தப்படுகிறான். நண்பனை காப்பாற்ற சூர்யா புறப்படும்போது, நான்கு பேர் சேர்த்த திருட்டு கும்பல் சூர்யாவிற்கு உதவ முன் வருகிறது.
இந்த திருட்டு கும்பல் அவர்களுக்கு ஏன் உதவியது..? ஸ்ரீ காப்பாற்றப்பட்டாரா..? என்பதெற்கெல்லாம் பதில்தான் மீதி கதை.
இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷலான விஷயமும் இருக்கு. கடந்த 2001-ம் வருடம் ஜூலை மாதம் 30-ம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டது நினைவிருக்கும்.
அப்போது ராஜ்குமார் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள தொட்டகஜனூர் என்னும் சிற்றூரில் உள்ள தனது சொந்த பண்ணைத் தோட்ட வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் இருந்தபோதுதான் வீரப்பனால் அவர் கடத்தப்பட்டார்.
அதே பண்ணை வீட்டில் எங்களது ‘அதிரன்’ படத்தின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம். அந்த பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடத்திய முதல் திரைப்படம் எங்களுடையது என்பதிலும் எங்களுக்குப் பெருமைதான்..” என்றார்.