கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கும் படம் ‘ஆதித்ய வர்மா’.
இப்படம் வணிக ரீதியான வெற்றியையும் பெற்று மிகச் சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படக் குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று மதியம் வடபழனி ‘கிரீன் பார்க்’ நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசும்போது, “என்னை விக்ரம் சார்தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இசை அமைப்பாளர் ரதன் பேசும்போது, “என் அம்மாவிற்கு நன்றி. என் எல்லா மேடைகளுக்கும் அவர்தான் காரணம். ஏ.ஆர்.ரகுமான் சாருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக நாங்கள் வாங்குற ஒவ்வொரு க்ளாப்ஸும் விக்ரம் சாருக்குத்தான் சேரும். இந்தப் படத்திற்காக நாங்கள் உழைத்ததைவிடவும் விக்ரம் சார்தான் அதிகம் உழைத்தார்.
இயக்குநர் கிரிசாயா நல்ல என்கிரேஜ் பண்ற நபர். இன்று யாரைக் கேட்டாலும் துருவ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கிரிசயா சாரும், விக்ரம் சாரும் இல்லாவிட்டால் இந்தப் புராஜெக்ட் வந்திருக்காது…” என்றார்.
நடிகர் அன்புதாசன் பேசும்போது, “இந்தப் படம் என் கனவு மாதிரி. இந்தப் படம் எனக்கு ஸ்ட்ராங்கான பொஸிசன். விக்ரம் சார், கிரிசாயா சார், துருவ் அனைவருக்கும் நன்றி.
நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு ஒரு சோல் இருக்கு. அதை கெடுத்துவிடக் கூடாது என்று நினைத்தேன். அதைச் சரியாக செய்திருக்கிறதாக நம்புகிறேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
இயக்குநர் கிரிசாயா பேசும்போது, “தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸிடம் செமையான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப் படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச் சிறந்த நடிகர். நவம்பர் 22-ம் தேதி ஒரு புது ஸ்டார் பிறந்திருக்கிறார். அதுதான் துருவ்” என்றார்.
நடிகர் துருவ் விக்ரம் பேசும்போது, “இப்பலாம் என்கிட்ட யாரும் பிரஸ் மீட் இருக்குன்னு சொல்றதே இல்லை. திடீர்னு காலையில எழுப்பி பிரஸ் மீட்னு சொல்றாங்க. படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத்தான் இரண்டு வருடங்கள் காத்திருந்தோம்.
கலை மாமா, கதிர் மாமா அவர்களுக்கு பெரிய நன்றி. என்னைச் சின்னப் பிள்ளையில் இருந்தே அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இசை அமைப்பாளர் உழைப்பு மிகப் பெரியது. கிரியாசா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி.
என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்டமாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அன்பு தாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார்.
உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட்தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி.
நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில்தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பாதான். இந்த வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத்தான் சேரும்.
இந்த வயதில் எனக்கு கிடைத்த ஆபர் என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேற லெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி…” என்றார்.
விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசும்போது, “இந்த ‘ஆதித்ய வர்மா’ படத்திற்கான காத்திருப்பு நேரம் ரொம்ப அதிகம். ‘அர்ஜுன் ரெட்டி’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘அர்ஜுன் ரெட்டி’ ஸ்கிரிப்ட்டுக்காகத்தான் இந்த படத்திற்குள் வந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது. ஒரு நல்ல ஹீரோ இந்தப் படத்திற்குள் இருக்கிறார்.
இப்போதைய தமிழ்ச் சினிமாவில் 20 வயதுடைய பெரிய ஹீரோக்கள் யாரும் நம்மிடம் இல்லை. இப்போது துருவ் கிடைத்து விட்டார். அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பசங்க எல்லாம் படம் பார்த்துட்டு நல்ல, நல்ல கமெண்ட்ஸ் கொடுக்கிறாங்க. முகேஷ் சார் இப்ப்டத்தை என்சாய் பண்ணி எடுத்திருக்கிறார். ஒரு விநியோகஸ்தரா நானும் என்சாய் பண்ணி விநியோகம் செய்த படம் இது…” என்றார்.
நடிகர் விக்ரம் பேசும்போது, “இதுவொரு அருமையான தருணம். ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. ஒரு இதழில் எழுதியிருந்த விமர்சனத்தில் ‘நேற்று துருவ் சீயான் விக்ரமின் மகன். இன்று துருவின் அப்பா சீயான் விக்ரம்.. சபாஷ்’ என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட வேறு பெருமை எதுவும் இருக்க முடியாது.
நான் பேச வேண்டியதை எல்லாம் துருவ் பேசிவிட்டார். இந்தப் படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக் கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார்.
ரவி.கே.சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரிய பலம் கிடைத்தது. அன்பு தாசன் இந்தப் படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்பு தாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத் மாரி எழுதியது. அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நானும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன்.
மேலும், என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம்.
இந்தப் படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. இந்தப் படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. இசை அமைப்பாளர் ரதனிடம், ‘நீ பெரிய இசை அமைப்பாளராக வருவாய்’ என்று நான் சொன்னேன். அது நடந்துவிட்டது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும். ஒட்டு மொத்தமாக பத்திரிகையாளர்கள், காட்சி ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி…” என்றார்.