full screen background image

கர்நாடகாவில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகும் அறிமுக ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி..!

கர்நாடகாவில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகும் அறிமுக ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி..!

எப்போதும் கேரளாவில் இருந்துதான் புதிய ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகுவார்கள். தற்போது ஒரு வித்தியாசமாக கர்நாடகாவில் இருந்து வந்திருக்கிறார் அறிமுக ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி.

இவரின் அப்பா கர்நாடகா என்றாலும்  அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர்  தமிழ் மொழி மீதும், தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராக இருக்கிறார். கர்நாடகாவிலேயே பிறந்து வளர்ந்தாலும் தமிழ் நன்கு பேசுகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் கர்நாடகாவில் இப்போதும் வெற்றிகரமாக 3-வது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது தமிழில் வெளிவரவுள்ள ‘எம்பிரான்’ படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் ராதிகா ப்ரீத்தி.

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் நாயகனாக ராதிகாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகர் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடித்தவர். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 

இப்படத்தில் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.  ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு – புகழேந்தி, படத் தொகுப்பு – மனோஜ், கலை – மாயவன், சண்டை பயிற்சி – டான் அசோக், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, நடனம் – தீனா மற்றும் விஜி. இப்படத்தை இயக்குநர் மகிழ்திருமேனியின் உதவியாளரான கிருஷ்ண பாண்டி இயக்கியிருக்கிறார் .

தனது தமிழ் அறிமுகம் பற்றிப் பேசிய நடிகை ராதிகா ப்ரீத்தி, “என் தாய் மொழி தமிழ் என்பதால் தமிழ் படங்களில் நடிப்பதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். மாடர்ன் பெண் கேரக்டரில் நடிப்பேன். ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன். நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குநர்களுக்காக காத்திருக்கிறேன்…” என்கிறார். 

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தினை  வரும் ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

Our Score