நாகர்கோவிலைச் சார்ந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.
இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரபல தெலுங்கு நடிகையான பானுஸ்ரீ நடிக்கிறார்.
நடிகை பானுஸ்ரீ தெலுங்கு மொழி திரைப்படங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர். ‘தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2’-வில் அதிகப் புகழ் பெற்றவர் இவர்தான்.
ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பை கையாள்கிறார். உலக அளவில் 450 CG தொழில் நுட்ப வல்லுநரான வி.தினேஷ்குமாரின் மேற்பார்வையில் VFX பணிகளை செய்து வருகிறார்கள். அறிமுக இயக்குநரான ஆண்ட்ரூ பாண்டியன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை பானுஸ்ரீ பேசும்போது, “இந்தப் படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல்வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம் என்னுடையது.
படத்தின் துவக்கத்தில் நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்.
இந்த பிரேக்கிங் நியூஸ் திரைப்படம் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் 90 நிமிடம் அளவிலான CG காட்சிகளும் இருக்கின்றன. இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல. நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம்.. நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது.
நாயகன் ஜெய், இவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும் மிகவும் எளிமையாக இருக்கிறார். உடன் நடிப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் தெளிவான ஒரு மனிதர். கதையில் என்ன சொன்னாரோ அதை மட்டுமே படமாக்கியிருக்கிறார்… ” என்றார்.
பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டார். அடுத்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.