நடிகர் சங்கத் தேர்தல் அநேகமாக செப்டம்பர் 21-ம் தேதி நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
இந்த்த் தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற குறிக்கோளோடு இருக்கும் விஷால் அணிக்கு சினிமா பிரபலங்கள் பலரின் வாழ்த்துகளும், பாராட்டுக்களும், ஆதரவும் கிடைத்தவண்ணம் இருக்கிறது.
சமீபத்தில் விஷால் தலைமையிலான பாண்டவர் டீம், சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது. வந்தவர்களை உடனேயே அனுப்பி விடாமல் அமர வைத்து அனைத்து விஷயங்களையும் கேட்டுக் கொண்டு அதே சமயம் எல்லாமும் தனக்குத் தெரியும் என்பதையும் சொல்லிவிட்டாராம் ரஜினி. விஷால் டீமோ “கண்டிப்பாக நீங்க வாக்குப் பதிவு செய்ய வர வேண்டும்..” என்று மட்டுமே ரஜினியிடம் கேட்டார்களாம். ரஜினியும் இதற்கு ஒத்துக் கொண்டிருப்பதாகச் செய்தி.
இதேபோல் கமல்ஹாசனை சந்தித்தபோது அவரும், விஷால் டீமில் தானும் ஒரு மெம்பர் என்பது போலவே பேசியிருக்கிறார். ஏற்கெனவே பல முறை இந்த அணியினருக்கு கமல்ஹாசன் ஆலோசனையெல்லாம் சொல்லியிருப்பது தெரிந்ததால்தான் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களிடையே நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கமல்ஹாசனை ஒருமையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகர் ராதாரவி. இதையெல்லாம் கேள்விப்பட்ட கமல்ஹாசன் விஷாலின் பாண்டவர் அணிக்கு ஆலோசகாரகவே இப்போது மாறிவிட்டார். ஆக, கமல்ஹாசனின் முழு ஆதரவும் இவர்களுக்குக் கிடைத்துவிட்டது.
அன்றைக்கே நடிகை குஷ்புவும் விஷால் அணியினருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டார். இவரும் கமல்ஹாசனை சந்திக்க விஷால் டீம் சென்றபோது உடன் சென்று பேசியிருக்கிறார். குஷ்புவின் ஆதரவு இந்த டீமுக்குக் கிடைத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று பல வருடங்களாக நீடித்து வரும் குஷ்பு-ராதிகாவின் சின்னத்திரை மோதலையும் சொல்லலாம்..
இன்றைக்கு கூடுதலாக மனோபாலவும், விவேக்கும் விஷாலின் பாண்டவர் டீமில் இணைந்திருக்கிறார்கள். விவேக் பற்றி பிரச்சினையில்லை. ஆனால் மனோபாலா இணைந்ததுதான் ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் ராதிகாவுக்கு மிக, மிக நெருக்கமானவர் மனோபாலா. இப்போது இருவரும் இணைந்து படங்களை தயாரித்தும் வருகிறார்கள். இந்த நேரத்தில் மனோபாலாவின் இந்த திடீர் விஷால் ஆதரவு எதற்கு, ஏன்.. எப்படி என்பது புரியவில்லை..!
எது எப்படியோ.. சினிமா நட்சத்திரங்களிடையே விஷால் டீமுக்கு பெருகிவரும் ஆதரவு எதிரணியினருக்கு சற்றுக் கலக்கத்தைத்தான் கொடுத்திருக்கிறது எனலாம்..!