full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் – தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சங்கத் தேர்தல் – தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், நடிகர்கள் சங்கத்தின் துணை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறித்து சங்கங்களின் பதிவாளர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் ஜூலை 15-ம் தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, நடிகர்கள் சங்கத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் 26-ம் தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான ராதாரவி மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீட்டு மனுவில், “சங்கத்தின் தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிட்டால், அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற பொதுவான விதியை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார்.

இந்த சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்த பின்னர், அவர்களுக்கு வாக்காளர்கள் பெயர் விவரம் பட்டியல் வழங்கப்படும். இந்த நடைமுறைதான் நடிகர்கள் சங்கத் தேர்தலின்போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையும் நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். 

நடிகர்கள் சங்கத்தின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி நடந்தது. இதில் 2 ஆயிரத்து 768 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ‘சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கவேண்டும்’ என்று சங்க துணை விதியில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 7 ஆண்டு என்று பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு செய்து, துணை விதியில் திருத்தம் செய்யப்பட்டது. 

இந்த திருத்தம் சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவற்றையெல்லாம் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். 

மேலும், ‘தேர்தல் அறிவிப்பை செயற்குழு அறிவிக்க அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் நிர்வாகக் குழுவிடம்தான் உள்ளது’ என்று மனுதாரர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு குழுக்களிலும் இடம் பெற்று இருப்பது ஒரே நபர்கள்தான். இவர்கள்தான் தேர்தல் தேதி, யார் தேர்தலை நடத்தும் அதிகாரி உள்ளிட்டவைகளை முடிவு செய்யவேண்டும்.  இவற்றையெல்லாம் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார்.

எனவே, தேர்தலுக்கு தடை விதித்த அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனுதாரான ராதாரவியின் சார்பில் மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம், எதிர் மனுதாரர்களான விஷால் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல் ரவீந்திரன், வக்கீல் கிருஷ்ணா ரவீந்திரன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது தேர்தலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை நீக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “நடிகர்கள் சங்கம் துணை விதிகளில் திருத்தம், தேர்தல், உண்மையான உறுப்பினர்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக இருபிரிவினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் போட்டியிடுபவர்களின் தகுதியை நிர்ணயம் செய்து கடந்த 2010-ம் ஆண்டு துணை விதியில் திருத்தம் செய்யப்பட்டதா என்பதை சங்கங்கள் பதிவாளர்தான் உறுதி செய்யவேண்டும். எனவே, அவரை இந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக உத்தரவிடுகிறோம்.

மேலும், நடிகர்கள் சங்கத்தின் துணை விதிகளை சங்கங்களின் பதிவாளர் தெளிவாக படித்து, அவர் இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக செயல்பட முடியும். அதேபோல, நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகி தேர்தலுக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த குறைபாடும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்..” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Our Score