full screen background image

“பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைமுறைப்படுத்தியிருக்கலாமே..?” – மத்திய அரசுக்கு நடிகர் விஜய் கேள்வி..!

“பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைமுறைப்படுத்தியிருக்கலாமே..?” – மத்திய அரசுக்கு நடிகர் விஜய் கேள்வி..!

நாட்டையே தற்போது உலுக்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற மத்திய அரசின் உத்தரவினை திரையுலகத்தினர் பலரும் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் டிவிட்டரிலும், முகநூலிலும் இது பற்றி தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற விஷயத்தைப் பற்றி இன்று ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசிய விஜய், “மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நிஜமாகவே நல்ல விஷயம்தான். கண்டிப்பா இது நம்ம நாட்டுக்கு தேவையான துணிச்சலான ஒரு முடிவுதான். கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை வளரத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு நோக்கம் பெரியதாக இருக்கும்போது அதற்கான பாதிப்பும் இருக்கத்தான் செய்யும். அந்த நோக்கத்தைவிட பாதிப்பு அதிகமாகிவிடக் கூடாது என்பதைத்தான்  பார்த்து கொள்ள வேண்டும்.

சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற சின்ன எண்ணம்தான். பொதுமக்கள் சாப்பாடு வாங்கி சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரை வாங்க முடியாமல், திரையரங்களில் டிக்கெட் வாங்க முடியாமல், பயணத்தின்போது ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் நபர்களை பார்க்கும்போது, தேவையில்லாமல் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

நான் தொலைக்காட்சி செய்திகளில் சில விஷயங்களை பார்த்தேன். மனதிற்கு அது கஷ்டத்தை அளிக்கும்விதத்தில் இருந்தது. தன் பேத்தியின் கல்யாணத்துக்கு நகை எடுக்க ஒரு பாட்டி பணம் சேர்த்திருக்கிறார். நகைக் கடையில் பாட்டி வைத்திருக்கும் பணம் செல்லாது என்றதும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளது. இதை போல் சில விஷயங்களை தவிர்த்திருக்காலம்.

நாட்டில், 20 சதவிகிதம்தான் பணக்காரர்கள் இருப்பார்கள். அதில் இருக்கும் சிறு குழுக்கள் செய்யும் தவறால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது..?

இது, இதுவரை யாரும் பண்ணாத யாரும் செய்யாத புதிய முயற்சிதான். ஆனால் இப்படி ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும்போது, ஒரு சட்டத்தை அமல்படுத்தும்போது அதற்கான முயற்சிகளை எடுக்கும்போது, அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை ஆராய்ந்து முடிவு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இன்று எல்லாம் நன்றாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. சீக்கிரமாகவே மத்திய அரசு எல்லாவற்றையும் சரி செய்தால் நன்றாக இருக்கும்…” என்றார் விஜய்.

Our Score