full screen background image

“ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்..?” – நடிகர் பொன்வண்ணன் விளக்கம். 

“ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்..?” – நடிகர் பொன்வண்ணன் விளக்கம். 

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் நிற்க முடிவெடுத்ததை எதிர்த்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பொன்வண்ணன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைவரான நடிகர் நாசரிடம் கடிதம் அளித்தார்.

ஆனால் அந்தக் கடிதத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நிராகரித்து ‘பொன்வண்ணன் மீண்டும் தனது பதவியில் தொடர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து இது பற்றி விளக்கமளிக்க இன்று காலை லீ மேஜிக் லேட்டர்ன் பிரிவியூ தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் பொன்வண்ணன்.

அப்போது அவர் பேசும்போது, “கடந்த இரண்டு நாட்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் மீடியாவுலகத்தில் வேகமாக பரவியிருக்கிறது.

நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் சாரிடம், கடந்த நான்காம் தேதியன்று ஒரு கடிதத்தை அளித்து, ‘அந்தக் கடிதத்தில் நான் கூறியிருக்கும் கருத்தை, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தர வேண்டும்’ என்று கேட்டிருந்தேன்.

ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைகளுக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் அவர்கள் அது பற்றி கேட்டபோது, நான் எவ்வித பதில் கூற முடியாத நிலையில் இருந்தேன். ஏனென்றால் ஒரு விவாதத்திற்கு பிறகு கிடைக்கும் தெளிவான பதிலைத்தான் உங்களிடம்  சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நாங்கள் 2014-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக முற்படும் அந்த காலகட்டத்திலிருந்து 2015 தேர்தல் காலகட்டம்வரை எங்களுடைய மிக முக்கிய பேச்சு என்னவாக இருந்தது என்றால் ‘நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு. இந்த அமைப்பின் பொறுப்புக்கு வருபவர்கள் தன்னலம் இல்லாமல், சேவை மனப்பான்மையுடன், சங்க வளர்ச்சிக்காக மட்டுமே செயல்பட்டு கூடவே, தன் கலை திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்…’ என்பதுதான்.

இப்படி சில கட்டுப்பாடுகளை எங்களுக்குள் வகுத்துக் கொண்டால், நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் அப்படி பேசியிருந்தோம். அதற்கு பிறகு நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ளும்போதும் இதை ஒரு முக்கிய கருத்தாகவே நினைத்து நாங்கள் பேசி வந்தோம்.

நாங்கள் சங்க விஷயத்தில் பொது மனிதனாகவும் அரசியலற்று செயல்படுவோம் என்றே முதலில் அனைவரிடமும் கூறினோம். இது ஊடக நண்பர்களுக்கு மே மாதம் முதலே தெரியும். பத்திரிகையாளர்களாகிய நீங்களும் எல்லா இடங்களிலும் இதை பதிவு செய்துள்ளீர்கள்.

தேர்தலின்போது யாரையெல்லாம் பொறுப்பிற்கு நிறுத்தலாம் என்று நாங்கள் யோசித்தபோது தலைவர் பதவிக்கு நாசர் சார், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர்கள் பதவிக்கு நானும், கருணாஸூம் நிற்பதாக முடிவு செய்தோம்.

அப்போதே கருணாஸிடம் ‘உங்களிடம் அரசியல் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும்’ என்றோம். அவரும் ‘நான் ஏற்கனவே ‘புலிப் படை’ என்ற அமைப்பிலும், மேடைப் பேச்சும் என்று போய் கொண்டு இருக்கின்றேன். என்னை கொண்டு வந்து துணை தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நான் பொறுப்பாக முடியாது,,’ என்று தெளிவாக சொன்னார்.

அப்போது நாங்கள், ‘இந்த நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் பூச்சி முருகன் தி.மு.க.வில் உள்ளார். குட்டி பத்மினி பி.ஜே.பி.யில் இருகிறார். குஷ்பு ஆதரவு தெரிவிக்கும்போது காங்கிரசில் இருந்தார். இதனால் இங்கு அரசியல் இல்லை. நாங்கள் அந்த மனநிலையில்தான் இருக்கின்றோம். ஆனால் நீ உன் பொறுப்பில் இருக்கும்போது அரசியலுக்கு போகாமல் பார்த்துக் கொள்…’ என்றோம்.

அது முடிந்து போய்விட்டது. நாங்கள் தேர்தலில் நிற்கும்போது மிகப் பெரிய விமர்சனம் எங்கள் மீது எழுந்தது. நாங்கள் அந்த கட்சியா இந்த கட்சியா என்று..!?அப்போது அரசியல் சாயம் எதுவும் எங்கள் மீது வந்து விடக் கூடாது என்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது கழகத்தை சார்ந்தவர்கள், யாரும் நடிகர் சங்க தேர்தலில் நிற்க வேண்டாம் என்றார்கள்.  அதனால் எங்கள் குழுவில் இருந்த அக்கட்சியினர்கள் யாரும் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அப்போதைய காலக்கட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவே மாறியது. ஏற்கனவே இருக்கும் குழுவை தோற்கடித்து புது குழு வருகிறது. இவர்கள் பேசும் கருத்து நன்றாக உள்ளது என்ற ஒரு நிலை எங்களுக்கு கிடைத்தது.

நாங்கள் வெற்றி பெற்ற முதல் நாளே, ‘சங்கத்தில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது’ என்று முடிவு செய்தோம். அதன் பின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தோம். அவர் தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார் அப்போது, ‘அரசியல் இல்லாமல் சங்கத்தை நடத்துங்கள்’ என்ற வார்த்தையை அவரும் அங்கு பதிவு செய்தார்கள்.

முதல் வாழ்த்து கலைஞர் ஐயா அவர்களிடம் இருந்து வந்தது. அவரையும் சந்தித்தோம். விஜயகாந்த் அவர்களையும் சந்தித்தோம். அப்போதைய அரசியல் சூழ்நிலையை பார்த்தால் அவர்களுக்குள் அரசியல் போட்டி இருந்தும், நாங்கள் யாரையும் சாராமல் பொதுவாகவே நடந்து கொண்டோம்.

அப்போதும் அவர்கள் அந்த கட்சியை சார்ந்தவர்.. இந்த கட்சியை சார்ந்தவர்.. என்று பேச்சு எங்களைச் சுற்றிலும் இருந்து கொண்டுதான் இருந்தது. எங்களுடைய நோக்கம் பொது தன்மை என்றுதான் அப்போதும் பதிவு செய்தோம்.

இந்த இரண்டு வருடங்களில் கார்த்தியும், விஷாலும் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்கள். படங்களில் நடிக்கும்போது அவற்றுக்காக 120 நாட்கள் ஒதுக்க வேண்டும். அப்படியென்றால் அவர்கள் எவ்வளவு நாள் படப்பிடிப்பில் இருக்க வேண்டியது இருக்கும்..?

இதனால் அவர்கள் ஷூட்டிங்கில் இருந்த காலக்கட்டத்தில் நாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் தலையிட்டு பொறுப்பை கவனித்துக்கொண்டோம். தினமும் அலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டிடத்தை மீட்டெடுப்பது, அதற்கான பணத்தை நீதிமன்றத்தில் இருந்து மீட்டெடுப்பது பற்றிப் பேசுவோம்.

மூன்று பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். கட்டிடத்திற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளோம், இரண்டு விழாக்களை நடத்தியுள்ளோம். இவ்வளவும் ஒரு குறிப்பிட காலக்கட்டத்தில், மிக சிறப்பாக கூட்டாக, ஒருங்கிணைந்து செய்து வந்துள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சங்கத்தில் நாங்கள் செய்த நிர்வாக செயல்பாடுகளை நான் ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன். யாரையும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். எங்களுக்குள் சின்ன, சின்ன கருத்து வேறுபாடு இருந்தது. அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

கடந்த 4-ம் தேதியன்று விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிற்கிறார் என்று டி.வி செய்தியில் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனையே நாசர் சார், கார்த்தி அவர்களை தொடர்பு கொண்டபோது அவர்களும் ‘அது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றார்கள்.

அரசியல் என்பது வேறு களம். அது மக்களுக்கான தொடர் ஓட்டம். நடிகர் சங்கம் என்பது 3500 பேர் கொண்ட ஒரு சிறிய தளம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என்றெல்லாம் பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் பிரச்சனைகள் நடிகர்கள் சங்கத்தின் மீது விழாது. அதைச் சமாளிக்க நேரமும், உழைப்பும் அவசியம் தேவை.

விஷால் அரசியலில் ஈடுபடுவது அவரது தனிப்பட்ட விஷயம் என்பதனால் என்னிடம் சொல்லவில்லை என்று நினைத்தேன். நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் வேறு எதிலும் இருக்கக் கூடாது என்று கூறவும் எனக்கு எந்த உரிமையும் இல்லை.

தார்மீக முறையில் பார்க்கும்போது எனக்கு இது ரொம்ப சங்கடமாகத்தான் இருந்தது. இந்த தொடர் ஓட்டம் சம்பந்தம் இல்லாமல் என்னையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது.

நான் விஷாலிடம் இது அவரது தனி மனித உரிமை என்று சொன்னால் ‘அப்போ ஏன் நீங்கள் தேர்தலில் போட்டியிடும்போது அப்படி சொன்னீர்கள்’ என்று சிலர் கேள்வியை எழுப்புவார்கள். சம்பந்தமே இல்லாமல் என் மீது விமர்சனம் வருவதும், பொறுப்பில் இருந்தும் என்னால் பதில் கூற முடியாமல் இருப்பதும், எனக்கு தேவையில்லாத ஒன்றாகவே நினைக்கிறேன்.

நான் முன்னர் கூறிய விஷயத்திற்கு எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அது பதவியில் இருந்தாலும் சரி.. இல்லாமல் போனாலும் சரி. அதனால்தான் நாசர் சாருக்கு ஒரு கடிதம் எழுதி அதில், ‘4-ம் தேதியில் இருந்து நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இதை இப்போது வெளியிட வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன். ஏனென்றால் விஷாலுக்கு அது ஒரு பின்னடைவாக மாறும் என்று எதிர்பார்த்தேன். விஷால் இப்போதும் என் நெருங்கிய நண்பர்தான். ஒரு கருத்தை கூறி அதற்கு மாறுபட்டு நடப்பதினால்தான் இந்த திடீர் முரண்பாடு ஏற்பட்டது. இப்போது விஷால் ஒரு பெரிய அரசியல் நோக்கத்துடன் உள்ளார் என்பது தெரிந்துவிட்டது. எனக்கு அதில் ஒரு தெளிவும் கிடைத்தது.

செயற்குழு உறுப்பினர்கள் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். நான் அந்த கடிதத்தில் சங்கம் தொடர்பாக மலேசியா செல்ல வேண்டிய நேரத்தில் அதில் கவனம் செலுத்தாமல் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இந்த இரண்டு நாட்களாக திரைத்துறையில் இருப்பவர்கள், நாடக கலைஞர்கள் அனைவரும் என்னை தொடர்பு கொண்டு ‘உங்கள் கருத்து உண்மையாக இருக்கின்றது. அனைவரும் கூட்டாக செயல்படுங்கள்’ என்று கூறினார்கள்.

இப்போது நான் பதிவு செய்வது, என்னவென்றால் நடிகர் சங்க கட்டிடத்திற்காக பெரிய நடிகர்களுடன் நட்பை பெற்றும், கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவுவதில் எனக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.

இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். இதற்காக மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் சங்கம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட வேண்டும்.

கார்த்திக், விஷால் இருவரும் என்னைவிட வயதில் சிறியவர்கள். நான் என்ன சொன்னாலும் கேட்க கூடியவர்கள், நாசர் சார் என்னைவிட மூத்தவர். நான் எது சொன்னாலும் அதை கேட்டுக் கொள்வார். நான் அவர்களைவிட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இப்போது இருப்பதினால், நான் அந்த பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்கான என் பணியினை தொடர்ந்து செய்வேன்.

அதே சமயம் விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்த என் தனிப்பட்ட கருத்தில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர் சங்கத்தில் இருந்து கொண்டு அரசியலுக்கு பயணப்படுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை..” என்றார் அழுத்தந்திருத்தமாக..!

நல்ல முடிவு.. விவேகமான முடிவு..!

Our Score