தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப் பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிக பிரம்மாண்டமான மற்றும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். சினிமாஸ் பிரபல இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது.
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, “இது போன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்குத்தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள்.
ஏ.ஜி.எஸ். சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏ.ஜி.எஸ்., எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.
இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்றுதான் கூறுவேன். ஏ.ஜி.எஸ். சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருப்பதால், இத்திரைப்படம் மிகப் பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும்…” என்றார்.
‘ஹவுஸ் ஓனர்’ படம் பற்றி லஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “இத்திரைப்படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்..” என்றார்.
‘பசங்க’ கிஷோர் மற்றும் அறிமுக நாயகியான லவ்லின் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.