full screen background image

54321 – சினிமா விமர்சனம்

54321 – சினிமா விமர்சனம்

எடுக்கக் கூடாத கதையை, எடுக்கக் கூடாதவிதத்தில் எடுத்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

ஊட்டியில் பள்ளியில் படித்து வரும் ஷபீர்தான் வகுப்பில் முதல் மாணவன். கிளாஸ் லீடரும்கூட. ஆனால் திடீரென்று ஊட்டிக்கு மாறுதலாகி வந்ததால் அந்த வகுப்பில் சேரும் அர்வின், அடுத்த தேர்வில் முதல் மதிப்பெண்ணை பிடித்து கிளாஸ் லீடராகவும் ஆகிவிட.. இயல்பாகவே ஷபீருக்கு அர்வின் மீது கோபம் ஏற்படுகிறது.

இந்தக் கோபம் பொறாமையாகி அவன் மனதில் வன்மமாக மாறி, அர்வினை தாக்கவும் செய்கிறான் ஷபீர். இந்தப் பிரச்சினையால் ஷபீரால், அர்வினின் தாயார் விபத்துக்குள்ளாகி மரணிக்கிறார். ஏற்கெனவே தந்தையை இழந்திருக்கும் அர்வின் இப்போது தாயையும் இழந்துவிட.. அவனையும் தன் வீட்டில் வைத்து அரவணைக்கிறார்கள் ஷபீரின் பெற்றோர்.

இது ஷபீருக்கு பிடிக்காமல் போக.. வீட்டில் ரகளை செய்கிறான். இந்த ரகளையில் ஷபீரின் தாய் இறந்துபோக.. ஷபீர்தான் அவளது இறப்புக்குக் காரணம் என்பதால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறான் ஷபீர். அங்கே அவனை விநோதமான ஒரு நோய் தாக்க.. அந்த நோயுடனேயே வளர்கிறான். ஆனாலும் மனதுக்குள் அர்வினை விடக் கூடாது என்கிற வன்மம் மட்டும் இருந்து கொண்டேயிருக்கிறது.

இப்போது அர்வின் வாலிபனாகி ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டான். இந்த நேரத்தில் ஷபீர் மனநோய் காப்பகத்தில் இருந்து தப்பித்து அர்வினைத் தேடி வருகிறான். இதே நேரம் இரண்டு திருடர்களும் அந்த வீட்டில் கொள்ளையடிக்க உள்ளே நுழைகிறார்கள்.

ஷபீர் என்ன செய்தான்..? அர்வின் தப்பித்தானா..? திருடர்கள் என்ன ஆனார்கள்..? என்பதெல்லாம் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!

ஒரு வித்தியாசமான திரில்லர் கதைதான். ஆனால் படம் பார்க்கும் அனைவரையும் அந்த குணம் பீடித்துவிடும் அளவுக்கான சிறப்பான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவேந்திரா பிரசாத்.  இதுதான் பயமாக இருக்கிறது.

இப்போதே நாட்டில் பல கொலைகள். திட்டமிட்ட படுகொலைகள் எல்லாம் தாறுமாறாக நடந்து வரும் சூழலில் இது போன்ற திரைப்படங்கள் வந்தால்.. நிச்சயம் மனிதருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மிருக வெறியை தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

வில்லனான ஷபீரை பிடித்திருக்கும் OCD நோயை பற்றி லேசாக சொல்லிவிட்டு தப்பித்துவிட்டதால் இது கொடூரமான மனநிலை கொண்டவனின் தாக்குதலாகவே ரசிகர்களால் பார்க்கப்படும். அந்த நோயின் தீவிரம் பற்றியும், ஒரு நோயாளியை போன்ற டிரீட்மெண்ட்டிலும் இந்தக் கேரக்டரை அணுகியிருக்க வேண்டும். இயக்குநரின் நேரம் போதாமை என்கிற அவசரத்தில் இதைத் தொடாததால் படம் பயங்கரவாதம் காட்டும் படமாக மாறியிருக்கிறது.

அர்வினை தாக்கும் காட்சிகளும், அர்வின் மனைவியின் விரலை வெட்டித் தள்ளும் காட்சிகளும், குழந்தையை கொல்லும் காட்சியும் மனதை பிசைய வைக்கும் காட்சிகள். இத்தனை வன்முறைகளுடன் படத்தை பார்க்க வைத்தால் எப்படி இயக்குநரே..?

வில்லன் ஷபீரே படத்தின் பிரதான கேரக்டர். தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். பயமுறுத்தியிருக்கிறார். மனநோயாளியின் பிம்பத்தை பிரதிபலித்திருக்கிறார். இன்னொரு ஹீரோவான அர்வினுக்கு சாப்டான கேரக்டர் என்றாலும் இறுதிக் காட்சியில் அவரையும் சண்டை போட வைத்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் பாவம் என்கிற உணர்வை தன் நடிப்பால் வரவழைத்திருக்கிறார் அர்வின்.

ஹீரோயின் பவித்ராவுக்கு அதிகம் வேலையில்லை. அதிலும் முக்கால்வாசி காட்சிகளில் கட்டிப் போட்டபடியே இருப்பதால் நோ யூஸ்.. ஷபீரின் அப்பாவாக வந்து தர்ம அடி வாங்கும் ராகவேந்தரை நினைக்கும்போது பாராட்டத் தோன்றுகிறது. பொதுவாக இது போன்ற கேரக்டர்களில் நடிக்க நடிகர்கள் முன் வர மாட்டாரகள். துணிந்து முன் வந்து அடி வாங்கி.. நடித்திருக்கும் அவருக்கு நமது பாராட்டுக்கள்.

திருடனாக நடித்திருக்கும் ஜெயக்குமாரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் வீண். இவ்வளவு தைரியமாக கொள்ளையடிக்க வரும் திருடன் ஏன் இப்படி பயந்தாங்கொள்ளியாக இருக்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால் இவருக்கான பிளாஷ்பேக் கதை அருமை. அந்த ரன் வேக ஓட்டத்தை படமாக்கியவிதமும் சூப்பர்ப்.

படத்தில் கடுமையாக உழைத்திருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நமது பாராட்டுக்கள். ஒளிப்பதிவாளர் பானு முருகனின் கைவண்ணத்தில் காட்சிகள் ரகளையாக படமாக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் உட்புறம்.. ஒரேயொரு ஹால்.. அங்கேதான் அத்தனையும் நடக்கிறது என்றாலும், கொஞ்சமும் போரடிக்காமல்.. அதே சமயம் பய உணர்வுடனேயே படத்தை பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இதேபோல் பின்னணி இசையும் தன் பங்குக்கு அதிகமாகவே மிரட்டியிருக்கிறது. ஜோஷ்வா ஸ்ரீதருக்கு நமது பாராட்டுக்கள். படத் தொகுப்பாளரான ரிஜீஸின் அற்புதமான வேலையினால் படத்தின் பிற்பாதியில் படம் ஒரு இறுகிய தன்மை கொண்டதாக மாறி, ரசிக்க வைத்திருக்கிறது.

படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்கள். போரடிக்காமல் செல்கிறது.. சைக்காலஜிக்கல் திரில்லர் டைப் படம் என்பதால் வன்முறை ஒரு பொருட்டல்ல என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனாலும், இந்தப் படம் எடுக்கப்பட கூடாத படம். இயக்கப்பட கூடாத கதை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

மொக்கையான இயக்கத்தில் தீவிரமான விஷயத்தை பேசுவது என்பது வேறு. டூவீலர் ஸ்டேண்ட்டில் டூவீலரை வெளியில் எடுப்பதற்குள் எல்லாமே மறந்துபோய்விடும். ஆனால் அதே தீவிரமான விஷயத்தை மிகச் சிறப்பான இயக்கத்தில் ரசிகனின் மனதுக்குள் திணிப்பது என்பது ஒரு சமூகத்தையே பேராபத்தில் கொண்டு போய்விடும். இதனால்தான் சொல்கிறோம். இயக்குநர் ராகவேந்திர பிரசாத் இந்த படத்தினை தவிர்த்திருக்கலாம்.

Our Score